இர்விங் லேட்டன் 1912ல் ருமேனியாவில் பிறந்தவர். ஒரு வயதில் கனடாவிலுள்ள மாண்ட்ரியலுக்கு புலம் பெயர்ந்தவர். வேளாண் இயலில் இளங்கலை பட்டம் பெற்றவர். சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றி, மெக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்தார். நாற்பது கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

1969-78 காலகட்டத்தில் யார்க் பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக பதவி வகித்தார். இவரின் பெயர் இருமுறை நோபல் பரிசுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டது.

"Fortunate Exile" என்னும் இவருடைய கவிதை தொகுப்பு வரலாற்றுடனான நீண்ட தனித்தன்மை வாய்ந்த யூதர்களின் அனுபவங்களைப் பேசுகின்றன. குறிப்பாக நாஜிகளுடன் பல்வேறு சமயங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் இந்தத் தொகுப்பிலிருந்து தமிழில் சில.

பாடம்

இது ஒரு விரல்
இது ஒரு கண்
ஒரு சிறிய வெட்டுக்கூட வலிக்கிறது
பிறகு எரிச்சலோடு
பெரும் அச்சம் வருகிறது
எலும்புகளைத் துண்டுகளாக்கும்
துப்பாக்கிரவை
கழுத்திலோ அடி வயிற்றிலோ நுழையும்போது
அல்லது இரத்தம் பின்வாங்கும்
கத்தியை தொடர்ந்து வரும்போதும்
மரணத்தைப் பற்றிய
திடீரென சூன்யமாய் அழிக்கப்படும் நினைப்பு
உதடுகளை வெளிறச் செய்கிறது.

உனக்கு நீயே சொல்லிக்கொள்ள வேண்டும்
இது திரைப்படமல்ல. இது நிஜம்
ஒரு சமயம் இருளில் குழந்தையாயழுத
ஒரு மனிதனுக்கு நிகழ்கிறதென்று
அவை உண்மையான குடல்கள்
அவன் கைகளில் வழிந்து கொண்டிருப்பவை
வலியும் பேரச்சமும் உண்மையானவை
நாம் மீண்டும் துவங்குவோம்
இது ஒரு விரல்
இது ஒரு கண்

ஆஸ்க்விட்ஜ்க்குப் பிறகு
(ஆஸ்க்விட்ஜ் : நாஜிகளின் வதைமுகாம்)

மகனே
தெளிவற்ற கவிஞனாய் இராதே
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
நேரடியாகவும் நேர்மையாகவுமிருக்கட்டும்
துப்பாக்கியின் சத்தத்தைப்போல.

இருபதாம் நூற்றாண்டின்
முதிர்ந்த கவிஞனொருவனை நம்பு
நம்பாதே பழைய ஆகமத்தை
புதிய ஆகமத்தையும்
அல்லது குரானின் அறிவுரைகளை
அல்லது மூன்று கூடைகளின் ஞானத்தை
அல்லது தம்மபதத்தை
அவை மனிதனின் மிருகத்தனத்தை
மாற்றுமென்றும் கட்டுப்படுத்துமென்றும்.

அன்பை உபதேசித்த
மக்களின் தோல்களிலிருந்து
விளக்குச் சீலைகள் செய்யப்பட்டன
ஆஸ்க்விட்ஜின் பெல்சன் எரியடுப்புகள்
அவர்களின் முட்டாள்தனத்துக்கு
பகிரங்க சாட்சிகளாயின.

பயங்கரத்துக்கும் வருத்தத்துக்கும்
நினைவுப் பேழைகளிருப்பினும்
வருத்தம், மகனே
அற்ப நேரத்துக்காகத்தான்
ஒரு தானியங்கித் துப்பாக்கி
காக்கிறது
ஒரு ஆயுட்காலத்தை.

(மொழிபெயர்ப்பு – லாவண்யா)

நன்றி : புது எழுத்து, நவ் 2005