“கதிரவன் எல்லோருக்கும் பிரகாசிக்கிறான்
சிறையிலிருப்பவர்களுக்கு அவன்
பிரகாசிப்பதில்லை
சுரங்கங்களில் உழைப்பவர்களுக்கும்
பிரகாசிப்பதில்லை…திறந்த வெளியில் அமர்ந்து
எல்லாமே நல்லபடியாக இருக்கிறதென்று
எழுதிக்கொண்டிருக்கும் மற்றவர்களின்
பேனாக்களை
இருட்டறையில் இருந்துகொண்டு
தயாரிப்பவர்களுக்கும்
பிரகாசிப்பதில்லை.”
என்று எழுதிய ழாக் ப்ரெவர் 1900ம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் பிறந்தார். பிரான்ஸின் வட மேற்கில் அட்லாண்டிக் கடலோரத்தின் பிரித்தானியா பிரதேசத்தை சேர்ந்தவர். மீனவர் துறைமுக வாழ்க்கையும், கடலின் மேல் இவர் கொண்டிருந்த காதலும் பல பிரபலமான கவிதைகளில் பிரதிபலித்தன. கட்டாய இராணுவ சேவை புரிந்த இவர் பிற்காலத்தில் பிரபலமான சர்ரியலிஸ்ட் ஓவியராக அறியப்பட்டார். பிரான்ஸை விட்டு புலம்பெயர்ந்தும் மீண்டும் சொந்த நகருக்கு திரும்பியும் வாழ்ந்த இவரது படைப்பாற்றல் திரைப்படம், கூட்டுறவு நாடக தயாரிப்பு (Collective Theater), எள்ளல் கவிதை மற்றும் பாடல் ஆகிய தளங்களில் இயங்கியது. இவைகளில் ஒன்றன் தாக்கம் அவரது அடுத்த படைப்புகளில் தென்பட்டு அவரது படைப்புகளுக்கு ஒருவித தனித்தன்மை அளிக்கத்துவங்கியது. 1929 – 1931 பிரான்ஸில் நடந்த பெரும் பொருளாதார சீர்குலைவு, 1935களில் ஏற்பட்ட இடதுசாரி ஆட்சி, 1937ல் இருந்து 46 வரை (ப்ரெவர்-கார்னே) உருவாக்கிய திரைப்படைப்புகள், இரண்டாம் உலகப்போர் ஆகியவைகளை தொடர்ந்து 1946ன் இறுதியில் முதல் கவிதை தொகுப்பான “சொற்கள்” வெளியானது.
ஓவியங்களில் பிகாஸோவும் கவிதைகளில் வில்லியம் ப்ளேக்கும் அவரை கவர்ந்திருந்தாலும் ப்ரெவரின் உலகத்தை பெரிதும் ஆக்கிரமித்திருந்தவர்கள் குழந்தைகள். அவர்களின் வெகுளித்தனமும் இயல்பான வெளிப்பாடுகளும் அவரை மிகவும் பாதித்தன. பெற்றோர்களின் கண்டிப்பு, பள்ளிக்கூடங்களின் இருக்கம், வறுமை, போர் இவற்றிற்கு ஆளாகும் குழந்தைகளின் பரிதாப நிலைக்கு காரணமான பெரியோர்களை அவர் சாடுகிறார். “குழந்தைகளின் பார்வையை சந்திப்பது பெரியவர்களுக்கு எப்போதும் சங்கடமாகவே இருந்திருக்கிறது. அவர்களின் இந்த சங்கடம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் ப்ரெவர்.
பாமர மக்களின் மொழியை இயல்பாகப்பேசிய ப்ரெவரை “இருபதாம் நூற்றாண்டின் குழந்தை” என பிரான்ஸ் மட்டுமல்லாது நமது கவியுலகமும் கொண்டாடுகிறது. இவர் 1977 ஏப்ரெல் 11ஆம் தேதி மறைந்தார். அவர் படைத்தவை 55 திரைப்பட கதை-வசனங்கள், 33 புத்தகங்கள் (6 கவிதை தொகுப்புகள் உட்பட), நூற்றுக்கணக்கான கொலாஜ் (Collage) சித்திரங்கள், 543 பாடல்கள்.
இழந்த நேரம்
ஆலையின் கதவிற்கு முன்னால்
திடீரென்று நிற்கிறான் தொழிலாளி
அவன் அங்கியைப் பிடித்து
இழுத்தது இனிய வானிலை
திரும்பிப் பார்த்த அவன்
சூரியனைப் பார்க்கிறான்
முற்றிலும் சிவப்பாக முழு உருண்டை
ஈயம் பூசிய வானிலிருந்து
புன்னகைத்தவாறு
அவனைப் பார்த்துக் கண்ணடிக்கிறது
பரிச்சயத்துடன்
தோழா, சூரியனே! நீயே சொல்
இது போன்ற ஒரு நாள்பொழுதை
முதலாளிக்கு அர்ப்பணிப்பதென்பது
சுத்த மடத்தனம் என்று
தோன்றவில்லையா உனக்கு?
மக்குப் பையன்
வேண்டாம் என்று தலையை ஆட்டுகிறான்
ஆனால் சரி என்கிறது அவன் இதயம்
அவனுக்குப் பிடித்ததற்கெல்லாம் ‘சரி’
ஆசிரியருக்கு ‘வேண்டாம்’
நின்றுகொண்டிருக்கும் அவனிடம்
கேள்வி கேட்கப்படுகிறது
எல்லாப் பிரச்சனைகளும் அவன்முன்
வைக்கப்படுகின்றன
திடீரென ஒரு பைத்தியக்காரச் சிரிப்பு
அவனைப் பற்றிக்கொள்கிறது
எல்லாவற்றையும் அழிக்கிறான்
எண்களை சொற்களை
தேதிகளை பெயர்களை
வாக்கியங்களை சிக்கல்களை
பிறகு ஆசிரியரின் மிரட்டலையும் மீறி
மேதைச் சிறுவர்களின் ஆரவாரத்தினூடே
பல வர்ணப் பென்சில்களைக் கொண்டு
இன்னல் எனும் கரும்பலகையில்
அவன் வரைவது மகிழ்ச்சியின் முகம்.
சிப்பாயின் ஒய்வுநாள்
பறவைக் கூட்டில் ராணுவத் தொப்பியை வைத்துவிட்டு
தலைமேல் பறவையுடன் கிளம்பிச் சென்றேன்
அப்படியானால்
தொப்பியை உயர்த்தி வணங்கப்போவதில்லையா
என்று கேட்டார் தளபதி
இல்லை
நாங்கள் இனி வணங்கப்போவதில்லை
என்று பதிலளித்தது பறவை
ஓகோ, சரி
மன்னிக்க வேண்டும்
வணங்குவது வழக்கம் என்று நினைத்தேன்
என்றார் தளபதி
நீங்கள் முற்றிலும் மன்னிக்கப்பட்டுவிட்டீர்கள்
எவருமே தவறு செய்யக்கூடும்
என்றது பறவை.
தகவல்
யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ மீண்டும் சாத்திவிட்ட கதவு
யாரோ அமர்ந்திருந்த நாற்காலி
யாரோ தடவிக்கொடுத்த பூனை
யாரோ கடித்துப்போட்ட பழம்
யாரோ படித்துப்போட்ட கடிதம்
யாரோ தட்டிவிட்ட நாற்காலி
யாரோ திறந்துவைத்துவிட்டிருந்த கதவு
யாரோ இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பாதை
யாரோ கடந்துசென்றுகொண்டிருக்கும் காடு
யாரோ குதித்துவிட்டிருந்த நதி
யாரோ இறந்துவிட்ட மருத்துவ விடுதி.
எங்கள் பிதா
பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே
அங்கேயே இருங்கள்
நாங்களோ இப்பூமியிலேயே இருக்கிறோம்
சிலசமயம் எழிலான இப்பூமியிலேயே
அதன் நியூயார்க் நகரத்தின் புதிர்களுடன்
பிதா, மகன், புனித ஆவி ஆகிய மூவருக்கும் ஒப்பான
பாரிசின் புதிர்களுடன்
அதன் சிறியவூர்க் கால்வாயுடன்
அதன் பெரிய சைனா சுவருடன்
அதன் மோர்லே நதியுடன்
அதன் புதினா மணம் சேர்ந்த மிட்டாயுடன்
அதன் பசிபிக் மகா சமுத்திரத்துடன்
அதன் துலரி பூங்காவின் இரு தடாகங்களுடன்
அதன் நல்ல குழந்தைகளுடன் மோசமான பிரஜைகளுடன்
இந்த பூமியில் மட்டுமே இருக்கும்
எல்லோருக்கும் பொதுவாக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும்
எங்கும் பரவியிருக்கும்
இவ்வுலகின் எல்லா அதிசயங்களுடனும்
இப்பேர்ப்பட்ட அதிசயங்களாக இருப்பது குறித்து
தாங்களே அதிசயத்தில் ஆழ்ந்திருப்பதோடு
ஒரு நிர்வாண அழகிய பெண் வெளியே வர
பயப்படுவதுபோல
தங்களை பறைசாற்றிக்கொள்ளப் பயப்படும்
அதிசயங்களுடன்
உலகத்தின் பயங்கரமான துன்பங்களுடன்
எண்ணிலடங்காத் துன்பங்களுடன்
உலகத்தின் ராணுவ வீரர்களுடன்
உலகத்தின் சித்திரவதையாளர்களுடன்
இந்த உலகின் எஜமானர்களுடன்
மதகுருக்கள் துரோகிகள்
முரட்டுப் போர்வீரர்களுடனான எஜமானர்களுடன்
பருவ காலங்களுடன்
வருடங்களுடன்
அழகிய பெண்களுடன் கிழட்டு மடையர்களுடன்
பீரங்கிகளின் எஃகு குழல்களில்
அழுகிப்போகும் வறுமையின் வைக்கோலுடன்
மொழியாக்கம் : வெ. ஸ்ரீராம்
(ழாக் ப்ரெவரின் முதல் தொகுப்பான “சொற்களி”ல் இருந்து எடுக்கப்பட்ட கவிதைகள் இவை)
2 பின்னூட்டங்கள்
Comments feed for this article
ஒக்ரோபர் 28, 2006 இல் 9:47 முப
மஞ்சூர் ராசா
மிகச் சிறந்த கவிதைகளை எடுத்துப் போட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
புதுக்கவிதைக்கான கட்டுரையும் ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தது.
மார்ச் 9, 2007 இல் 3:57 முப
நம்பி
ழாக் ப்ரெவெர் அவர்கள் பற்றி அறியத் தந்தமைக்கு
நன்றி.
“பீரங்கிகளின் எஃகு குழல்களில்
அழுகிப்போகும் வறுமையின் வைக்கோலுடன்”
–வரிகள் மிகவும் பாதிக்கின்றன. அவரைப் பற்றி
மேலும் படித்தறிய தூண்டியிருக்கிறது உங்கள் பதிவு.
வாழ்த்துக்கள்!
அன்புடன்,
நம்பி.பா.